கிணறு வெட்டும் வேலை, முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கிறது.

ஞாயிறு, 17 ஜனவரி, 2016

சூடு பிடிக்கும் தேர்தல் களம்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவோரை தேர்வு செய்வதற்கான பிரசாரம், களை கட்டியிருக்கிறது. பிப்.,1ல் ஐயவோ மாநிலத்தில், இரு முக்கிய கட்சிகளும், உட்கட்சி தேர்தலை தொடங்குகின்றன.
தொடர்ந்து, ஒவ்வொரு மாநிலமாக தேர்தல் நடக்கும்; முடிவில், இரு கட்சிகளும் தேசிய மாநாடு நடத்தி, தங்கள் வேட்பாளரை தேர்வு செய்வர்.
சத்துணவுக் கட்சி, மது விலக்கு கட்சி, அமைதிக் கட்சி, பசுமைக்கட்சி, சுதந்திரக் கட்சி, சோஷலிசக்கட்சி என கட்சிகள் நிறைய இருந்தாலும், அதிபர் தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதப்போவது, குடியரசுக் கட்சியும், ஜனநாயகக் கட்சியும்தான்.
ஆளும் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட ஹிலாரி கிளிண்டன், தயாராக இருக்கிறார். மூன்று ஆண்டாக, ஊர் ஊராக பிரசாரம் செய்வது மட்டுமே, அவருக்கு முழு நேர வேலையாகி இருக்கிறது.
இரு முறை அமெரிக்க அதிபராக இருந்த  கிளிண்டனும், அவர் மனைவி ஹிலாரியும், 30 ஆண்டுக்கும் மேலாக முழு நேர அரசியல் பிரபலங்களாக இருப்பதால், பண பலமும், ஆதரவும் அதிகம்; ‘அவர்களை எதிர்ப்பது வீண் வேலை’ என்ற எண்ணம், ஜனநாயகக் கட்சியினர் பலருக்கு ஏற்பட்டிருக்கிறது. எனினும், அக்கட்சியின் பெர்னி சாண்டர்ஸ், நம்பிக்கையோடு களத்தில் இருக்கிறார்.
அமெரிக்க அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் மற்றொரு கட்சியான குடியரசுக் கட்சியில், ஏகப்பட்ட பேர் போட்டியில் இருந்தாலும், கோடீஸ்வரர் டொனால்டு ட்ரம்ப் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார்.
டெட் குரூஸ், ரான்ட் பால், மேக்ரோ ரூபியோ, பென் கார்ஸன், கர்லி பியோரினா, ஜெப் புஷ் உள்ளிட்டோரும், போட்டியில் இருக்கின்றனர்.
நம்மூர் பாபி ஜிண்டால் உட்பட ஐந்து பேர், போட்டியிடுவதாக அறிவித்துவிட்டு, நிலவரம் கலவரமானதை தொடர்ந்து, பின்வாங்கி விட்டனர்.
எந்த ஒரு விஷயத்திலும், தாறுமாறாக பேசக்கூடிய டொனால்டு டிரம்ப், ‘தான் ஒரு உளறுவாயர்’ என்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறார். தொலைக்காட்சி விவாதங்களிலும், தேர்தல் பிரசார நிகழ்ச்சிகளிலும், அவர் வாயைத் திறந்தாலே, குண்டு வீசியதைப் போன்ற கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.
சினிமாவில் ஆன்டி-ஹீரோக்களுக்கு கிடைக்கும் வரவேற்பைப் போல, டிரம்புக்கும் மக்கள் ஆதரவு அமோகமாக இருக்கிறது. இஸ்லாமியர்கள், மத்திய, தென் அமெரிக்க நாடுகளில் இருந்து குடியேறுபவர்களை பற்றிய அவரது கருத்துக்கள், பல்வேறு தரப்பினரிடமும் கவலையை ஏற்படுத்தியுள்ளன.
அமெரிக்க அதிபர் தேர்தல், ஒரு மறைமுகத் தேர்தல். அதாவது, தேர்வாளர்களை கொண்ட தேர்தல் கல்லுரி முறை, நடைமுறையில் உள்ளது. வாக்காளர்களால் நேரடியாக தேர்வு செய்யப்படும் தேர்வாளர்கள் ஓட்டளித்து, அதிபரை தேர்வு செய்கின்றனர். இந்தாண்டு தேர்தல், நவ.,8ல் நடக்கிறது.
முன்னதாக, குடியரசுக் கட்சியின் தேசிய மாநாடு, ஓகியோவின் கிளீவ்லேண்ட் நகரில், ஜூலை 18-21ம் தேதிகளில் நடக்கிறது. ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாடு, பிலடெல்பியா நகரில், ஜூலை 25ல் நடக்கிறது. மாநாடுகளில், பிரதிநிதிகள் ஓட்டளித்து, கட்சிகளின் அதிகாரபூர்வ வேட்பாளர்களை தேர்வு செய்வர்.
வல்லரசு நாடான அமெரிக்காவின் சர்வதேச அளவிலான செயல்பாடுகள் எரிச்சலை ஏற்படுத்தினாலும், அந்நாட்டின் தேர்தல் முறை பலருக்கு உடன்பாடானாதாகவே இருக்கும். அதிலிருக்கும் வெளிப்படை முறை ஒரு முக்கியக் காரணம்.
தேர்தலில் போட்டியிட விரும்புவோர், நிதி திரட்டுவது, செலவிடுவது எல்லாம் வெளிப்படையாக இருக்க வேண்டும். போட்டியிடுபவர் மீதான தனிப்பட்ட புகார்கள், குற்றச்சாட்டுகள் எல்லாம் அலசி ஆராயப்படுவது வழக்கம்.
‘தங்களை ஆட்சி செய்பவர்கள் நேர்மையானவர்களாக இருக்க வேண்டும்’ என்று, அமெரிக்க மக்கள் விரும்புவதும் இதற்கு முக்கிய காரணம். ‘யாருக்கு ஆதரவு’ என்பதை, பெரும்பான்மை அமெரிக்கர்கள் வெளிப்படையாக அறிவித்து விடுவது, குறிப்பிடத்தக்க அம்சம்.
போலீஸ் வேலை பார்ப்பதும், போர்களை நடத்துவதுமாக இராமல், அமைதிக்கும், ஏழை நாடுகளின் வளத்துக்கும் வழி செய்யக்கூடிய ஒருவர், அதிபராக வந்தால், அமெரிக்கர்கள் மட்டுமல்ல; அனைவருக்கும் நன்மையே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக