கிணறு வெட்டும் வேலை, முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கிறது.

ஞாயிறு, 3 ஜனவரி, 2016

சீரழிந்த நம்பிக்கை!

அமெரிக்காவின் முதல் கருப்பின அதிபர் என்ற பெருமையுடன் பதவிக்கு வந்தவர் ஒபாமா. ஓட்டளித்தவர்களுக்கு மட்டுமல்ல; உலக மக்களில் கணிசமான பகுதியினருக்கு, அவர் மீது நல்லெண்ணமும், ஏதோ ஒரு இனம்புரியாத நம்பிக்கையும் இருந்தன.
ஆனால், அவர்கள் எல்லோரையும் ஒபாமா கைவிட்டு விட்டார் என்பதே, இப்போது உலகளாவிய கருத்தாக இருக்கிறது. சர்வதேச அரசியலிலும், உள்நாட்டு அரசியலிலும், ஒபாமாவின் பல நிலைப்பாடுகள் கேலிக்குரியதாக மாறியிருக்கின்றன.
‘தங்களுக்கெல்லாம் ஏதாவது நல்லது நடக்கும்’ என்று எதிர்பார்த்த அமெரிக்க கருப்பினத்தவர், ‘ஒபாமாவின் ஏழாண்டு ஆட்சியில், தாங்கள் அடைந்தது எதுவுமில்லை’ என்றே கருதுகின்றனர். கருப்பின இளைஞர்களும், பெண்களும் வெள்ளையின போலீசாரால் அடுத்தடுத்து வேட்டையாடப்பட்ட சம்பவங்கள், அமெரிக்காவில் அவ்வப்போது அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன. பெர்குஸன் நகரில் அப்படிப்பட்ட சம்பவம் நடந்தபோது, ஒபாமா விடுமுறையில் கோல்ப் விளையாடிக் கொண்டிருந்தார்.
பொருளாதாரத்திலும், ராணுவ ரீதியாகவும், பலம் வாய்ந்த தங்கள் நாடு, ஒபாமாவின் செயல் திறனற்ற ஆட்சியால், தேவையற்ற விமர்சனங்களுக்கு ஆளாகி வருவதாக, அமெரிக்கர்களின் மதிப்பீடு இருக்கிறது.
அவரது பதவிக்காலத்தில் எடுக்கப்பட்ட சர்வதேச அரசியல் முடிவுகளில், கம்யூனிச நாடான கியூபாவுடன் மீண்டும் உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதும், ஈரானுடன் பேச்சு நடத்தி, பொருளாதார தடைகளை விலக்கிக் கொள்வதும் முக்கியமானவை.
அறுபது ஆண்டுக்கும் மேலாக, பொருளாதார தடைகளுக்கு ஆளாக்கப்பட்டிருந்த கியூபாவுடன் மீண்டும் உறவு ஏற்படுத்திக் கொள்ளும் முடிவுக்கு, பெரிய அளவில் எதிர்ப்பில்லை. ஆனால், ஈரான் விவகாரம் அப்படியல்ல; முக்கிய எதிர்க்கட்சியான, குடியரசு கட்சியினரின் கடும் எதிர்ப்பையும், தோழமை நாடான இஸ்ரேலின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், ஈரானுடன் பேச்சைத் தொடங்கினார் ஒபாமா.
‘பொருளாதாரத் தடையை விலக்கிக் கொள்ள வேண்டுமெனில், அணு ஆயுதம் தயார் செய்யக்கூடாது’ என்பதே, அமெரிக்க தரப்பு வாதம். இதை ஏற்றுக் கொண்ட ஈரான், ‘அணு ஆயுதம் தயாரிக்க மாட்டோம்’ என்று உறுதி கூறி, பொருளாதார தடையில் இருந்து தப்பித்து வெளியே வர முயற்சிக்கிறது.
பேச்சுவார்த்தைக்கு, உள்ளூரிலும், உலக அளவிலும், கடும் எதிர்ப்பு இருக்கவே செய்தது.
இருந்தாலும், தன் நிலையில் ஒபாமா உறுதியாக இருந்தார். எறும்பு ஊர கல்லும் தேய்ந்தாற்போல, இப்போது அவரது முடிவு மாறும் போலிருக்கிறது. ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகள் விதிக்க முடிவெடுக்கப்பட்டால், அது ஒரு வகையில், ஒபாமாவின் ‘அந்தர் பல்டி’ என்றே சொல்ல வேண்டும்.
மற்றபடி, லிபியா மீது தாக்குதல் நடத்தி, அந்நாட்டை சீர்குலைத்தது, ஈராக்கின் ஒரு பகுதியை பயங்கரவாதிகள் கைப்பற்றியும், கண்டுகொள்ளாமல் இருந்தது, ஆப்கானிஸ்தானில் இருந்து ராணுவத்தை அவசரம் அவசரமாக திரும்பப்பெற்று இப்போது விழி பிதுங்கியிருப்பது, சிரியா பிரச்னையில் மூக்கை நுழைத்து குழப்பம் விளைவிப்பது, உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிராக தடைகளை விதித்து, ஐரோப்பிய நாடுகளையும் விடாப்பிடியாக நிர்ப்பந்தம் செய்வது என அடுத்தடுத்து பல குளறுபடிகளுக்கு அமெரிக்கா காரணமாக இருந்தது, ஒபாமாவின் பதவிக்காலத்தில்தான்.
தனி நாடாக உருவான காலம் முதல், எந்த ஒரு அமெரிக்க அரசுடனும், இஸ்ரேல் அரசு இந்த அளவு உரசிக் கொண்டதாக சரித்திரம் இல்லை. அந்தளவுக்கு, ஒபாமா அரசு மீது, இஸ்ரேலியர்களுக்கு வெறுப்பு உண்டாகி விட்டது.
ஒரு ராணுவ அமைச்சர், திடுதிப்பென்று பதவியில் இருந்து விரட்டியடிக்கப்படுவதெல்லாம், சர்வாதிகார நாடுகளில் மட்டுமே சாத்தியம். அதையும் நிகழ்த்திக் காட்டி விட்டார் ஒபாமா. அகதிகள் பிரச்னையால், ஐரோப்பிய நாடுகள் திணறித் தத்தளிப்பதை கண்கூடாகப் பார்த்தும், கையைப் பிசைந்து கொண்டு நின்றவராகவே இருந்தார். அவரால், எந்த முடிவும் எடுக்க முடியவில்லை.
ஒசாமா பின் லேடனை வேட்டையாடியது அவரது பதவிக்காலத்தில் நடந்திருக்கிறது. அதுகூட, நீண்ட காலத்திட்டம். ஒபாமாவின் பங்கெல்லாம், அதிரடியாக பாகிஸ்தானில் நுழைந்து தாக்குதல் நடத்த அனுமதியளித்தது மட்டும்தான்.
கியூபா எல்லையில் குவாண்டனாமோ விரிகுடாவில், பயங்கரவாதிகளை அடைத்து வைப்பதற்கான சிறைச்சாலை இருக்கிறது. ‘ஆட்சிக்கு வந்தால், அந்த சிறைச்சாலையை மூடுவேன்’ என்பது ஒபாமாவின் வாக்குறுதி. இன்றுவரை அது நிறைவேற்றப்படவில்லை. ‘அதெல்லாம் முடியாது’ என்று, பாதுகாப்புத்துறை கூறி விட்டதாக, தகவல்கள் கசிகின்றன.
‘ஈராக், ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்கப்படைகளை திரும்பப்பெறுவேன்’ என்பது ஒரு வாக்குறுதி. திரும்பப்பெறவும் முயற்சித்தார். ‘பயனில்லை’ என்று தெரிந்தநிலையில், இப்போது ஈராக்கிலும், ஆப்கனிலும், மீண்டும் அமெரிக்கப்படைகள் பாதுகாப்புக்கு வரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. அந்த வகையில், ஒபாமாவின் வாக்குறுதி, முன்யோசனையற்ற, வெற்று வாக்குறுதி என்றே நிரூபணம் ஆகியுள்ளது.
‘ஒபாமாகேர்’ என்று தம்பட்டம் அடிக்கப்பட்ட சுகாதாரக் காப்பீடு திட்டம் மட்டுமே, அவரது பெயரை சொல்லிக் கொண்டிருக்கும் என்கின்றனர், அமெரிக்கர்கள்.
பதவிக்காலம் முடிவதற்கு இன்னும் ஓராண்டு காலம் முழுமையாக இருக்கும் நிலையில், சாதித்து விட்டதாக சொல்லிக் கொள்வதற்கு பெரிதாக எதுவுமின்றி, படிக்காமல் தேர்வை எதிர்கொள்ளும் மாணவனை ஒத்த மனநிலையுடன் வெள்ளை மாளிகையில் உட்கார்ந்திருக்கிறார், ஒபாமா. ‘நம்மால் முடியும்’ என்ற அவரது கோஷத்தின் ஜாலத்தில் ஏமாந்த அமெரிக்கர்கள், சீரழிந்த நம்பிக்கையாகவே அவரைப் பார்க்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக