கிணறு வெட்டும் வேலை, முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கிறது.

சனி, 23 ஜனவரி, 2016

குரங்குகள் கையில் பூமாலை!

மாலத்தீவில், ஜனநாயகம் குப்பைக்கூடைக்குப் போய், மூன்றாண்டுகள்  கடந்து விட்டன. ஒரே நம்பிக்கையான, முன்னாள் அதிபர் நஷீத்,  இப்போதுதான் சிறைக்கம்பிகளுக்கு பின்னால் இருந்து, ஜாமினில் வ ந்திருக்கிறார்; அதுவும், முதுகெலும்பு அறுவை சிகிச்சைக்காக.
வக்கீல் அமல் குளூனியின் பிரபலமும், அவரது அமெரிக்க, ஐரோப்பிய  தொடர்புகளும், நஷீத்துக்கு இந்த ஜாமினை பெற்றுக் கொடுத்திருக்கின்றன.
நஷீத், ஜனநாயக அடிப்படையில், மக்களால் தேர்வு செய்யப்பட்டு  ஆட்சிக்கு வந்தவர். இந்திய ஆதரவாளரான அவரது ஆட்சி, துப்பாக்கி  முனையில் கவிழ்க்கப்பட்டது.
அரசு சுமத்திய பயங்கரவாத குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், அவருக்கு  13 ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. அந்த தண்டனையில் இருந்துதான், நஷீத்துக்கு ஒரு மாதம் இடைக்கால ஜாமின் கிடைத்திருக்கிறது.
மாலத்தீவில் இப்போது, அப்துல்லா யாமீன்  தலைமையில் நடப்பது, இந்திய விரோத, சர்வாதிகார ஆட்சி. முப்பது ஆண்டுக்கும் மேலாக அதிபராக இருந்த கயூம் பின்னணியில் இருக்கும் தற்போதைய ஆட்சியில், ஜனநாயகம் என்பது பெயரளவுக்குக்கூட கிடையாது.
மாலத்தீவில் ஜனநாயகம் சீரழிக்கப்படுவதையும், அரசியல் எதிரிகள் சிறையில் அடைக்கப்படுவதையும் சர்வதேச நாடுகள் வேடிக்கை பார்க்கின்றன.
சிரியா, ஈராக், லிபியாவைப் போல், எண்ணெய் வளமோ, பிராந்திய முக்கியத்துவமோ  இல்லாத மாலத்தீவில், ஜனநாயகம் இருந்தாலென்ன, சர்வாதிகாரம்  இருந்தாலென்ன என்பதே, மேற்கத்தியர்களின் நிலை.
ஐ.நா.,வும், ஐரோப்பிய யூனியனும், காமன்வெல்த் கூட்டமைப்பும், அவ்வப்போது வெளியிடும் அறிக்கைகளைப் பற்றி, மாலத்தீவு ஆட்சியாளர்கள் கண்டுகொள்வதேயில்லை. சர்வதேச அரங்குகளில் தங்களுக்காக வாதாட, அவர்களும் ஒரு பிரபல வக்கீல் வைத்திருக்கின்றனர்.  அவர், முன்னாள் பிரிட்டீஷ் பிரதமர் டோனி பிளேரின் மனைவி  செர்ரி பிளேர்.
மொத்தம், 1192 தீவுகளை கொண்ட மாலத்தீவு, சன்னி இஸ்லாமியர்கள்  பெரும்பான்மையாக வசிக்கும் நாடு. போர்ச்சுக்கீசியர்கள், டச்சுக்காரர்கள், பிரிட்டீஷ்காரர்கள் என மூன்று வெவ்வேறு நாடுகளின் காலனி ஆட்சியில் இருந்த தீவுக்கூட்டம், 1965ல் தனி நாடாக சுதந்திரம்  பெற்றது.
சுற்றுலாவும், மீன்பிடித்தலும் பிரதான தொழில்கள். உலகின் மிக தாழ்வான நாடு என்பதால், சற்றே கடல் நீர் மட்டம் உயர்ந்தாலும்,  மூழ்கி விடும் அபாயம் உண்டு. பிரிட்டீஷ் ஆட்சியாளர்கள் செய்த  எண்ணற்ற குழப்பங்களில், மாலத்தீவுகளை தனி நாடாக அறிவித்ததும்  ஒன்று.
‘சிகிச்சைக்காக, ஜாமினில் லண்டன் சென்றுள்ள நஷீத், திரும்பி வருவார் என்பது நிச்சயமில்லை’ என்பதே மாலத்தீவு ஆட்சியாளர்களின் எண்ணமாக இருக்கிறது.
எனவேதான் ‘குடும்பத்தில் ஒருவர், பிணைக்கைதியாக இருந்தால்தான்,  நஷீத்தை விடுதலை செய்வோம்’ என்று, உலகின் வேறெந்த நாகரிக  கலாசாரம் கொண்ட நாட்டிலும் இல்லாத வகையில், நிபந்தனை  விதித்தனர்.
அதை ஏற்றுக்கொண்டு, சகோதரர் ஒருவர், பிணைக்கைதியாக மாலத்தீவில் இருப்பதற்கு உத்தரவாதம் தெரிவித்தபிறகே, நஷீத்தை அரசு ஜாமினில் விடுவித்துள்ளது; அதுவும், 30 நாட்களுக்குள்  நாடு திரும்பிவிட வேண்டும் என்ற நிபந்தனையுடன்.
லண்டன் சென்றிருக்கும் நஷீத், தன் வக்கீல் உதவியுடன், பிரிட்டன்  பிரதமர் கேமரூனை சந்தித்து உதவி கோரியிருக்கிறார். ‘இன்னுமா இந்த உலகம் நம்மை நம்புகிறது’ என்று கேமரூன் மனதுக்குள்  எண்ணியிருக்கக்கூடும்.
உலக நாடுகளை விட்டுத்தள்ளுங்கள்! அண்டை நாடான இந்தியாவால்  என்ன செய்ய முடிந்தது? அவ்வப்போது, மாலத்தீவின் ஆட்சியாளர்களிடம் மூக்குடைபடுவது, டில்லிவாலாக்களுக்கு வாடிக்கையாகி இருக்கிறது.
இந்திய விரோத, சீன ஆதரவு, மத அடிப்படைவாத சக்திகள், மாலத்தீவில் வேரூன்றி விட்டதை, டில்லிவாலாக்கள் புரிந்து கொண்டிருப்பதால்தான், ‘இருக்கும் மரியாதை தொடர்ந்தால்போதும்’ என்பதாக, அமைதி காக்கின்றனர்.
மாலை போன்ற வடிவில் அமைந்த தீவுக்கூட்டம் என்பதால், மாலைத்தீவுகள் என்ற பெயர், பழந்தமிழர் பயன்பாட்டில் இருந்திருக்கிறது. அப்பெயரே, காலப்போக்கில் மருவி, மாலத்தீவுகளாக மாறியிருக்கிறது. அந்நாட்டின் இப்போதைய நிலையை எண்ணிப் பார்த்தால், ‘பூமாலை, குரங்குகளிடம் சிக்கியிருக்கிறது என்று வர்ணிப்பதே, மிகப் பொருத்தமாக இருக்கும்.

ஞாயிறு, 17 ஜனவரி, 2016

சூடு பிடிக்கும் தேர்தல் களம்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவோரை தேர்வு செய்வதற்கான பிரசாரம், களை கட்டியிருக்கிறது. பிப்.,1ல் ஐயவோ மாநிலத்தில், இரு முக்கிய கட்சிகளும், உட்கட்சி தேர்தலை தொடங்குகின்றன.
தொடர்ந்து, ஒவ்வொரு மாநிலமாக தேர்தல் நடக்கும்; முடிவில், இரு கட்சிகளும் தேசிய மாநாடு நடத்தி, தங்கள் வேட்பாளரை தேர்வு செய்வர்.
சத்துணவுக் கட்சி, மது விலக்கு கட்சி, அமைதிக் கட்சி, பசுமைக்கட்சி, சுதந்திரக் கட்சி, சோஷலிசக்கட்சி என கட்சிகள் நிறைய இருந்தாலும், அதிபர் தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதப்போவது, குடியரசுக் கட்சியும், ஜனநாயகக் கட்சியும்தான்.
ஆளும் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட ஹிலாரி கிளிண்டன், தயாராக இருக்கிறார். மூன்று ஆண்டாக, ஊர் ஊராக பிரசாரம் செய்வது மட்டுமே, அவருக்கு முழு நேர வேலையாகி இருக்கிறது.
இரு முறை அமெரிக்க அதிபராக இருந்த  கிளிண்டனும், அவர் மனைவி ஹிலாரியும், 30 ஆண்டுக்கும் மேலாக முழு நேர அரசியல் பிரபலங்களாக இருப்பதால், பண பலமும், ஆதரவும் அதிகம்; ‘அவர்களை எதிர்ப்பது வீண் வேலை’ என்ற எண்ணம், ஜனநாயகக் கட்சியினர் பலருக்கு ஏற்பட்டிருக்கிறது. எனினும், அக்கட்சியின் பெர்னி சாண்டர்ஸ், நம்பிக்கையோடு களத்தில் இருக்கிறார்.
அமெரிக்க அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் மற்றொரு கட்சியான குடியரசுக் கட்சியில், ஏகப்பட்ட பேர் போட்டியில் இருந்தாலும், கோடீஸ்வரர் டொனால்டு ட்ரம்ப் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார்.
டெட் குரூஸ், ரான்ட் பால், மேக்ரோ ரூபியோ, பென் கார்ஸன், கர்லி பியோரினா, ஜெப் புஷ் உள்ளிட்டோரும், போட்டியில் இருக்கின்றனர்.
நம்மூர் பாபி ஜிண்டால் உட்பட ஐந்து பேர், போட்டியிடுவதாக அறிவித்துவிட்டு, நிலவரம் கலவரமானதை தொடர்ந்து, பின்வாங்கி விட்டனர்.
எந்த ஒரு விஷயத்திலும், தாறுமாறாக பேசக்கூடிய டொனால்டு டிரம்ப், ‘தான் ஒரு உளறுவாயர்’ என்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறார். தொலைக்காட்சி விவாதங்களிலும், தேர்தல் பிரசார நிகழ்ச்சிகளிலும், அவர் வாயைத் திறந்தாலே, குண்டு வீசியதைப் போன்ற கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.
சினிமாவில் ஆன்டி-ஹீரோக்களுக்கு கிடைக்கும் வரவேற்பைப் போல, டிரம்புக்கும் மக்கள் ஆதரவு அமோகமாக இருக்கிறது. இஸ்லாமியர்கள், மத்திய, தென் அமெரிக்க நாடுகளில் இருந்து குடியேறுபவர்களை பற்றிய அவரது கருத்துக்கள், பல்வேறு தரப்பினரிடமும் கவலையை ஏற்படுத்தியுள்ளன.
அமெரிக்க அதிபர் தேர்தல், ஒரு மறைமுகத் தேர்தல். அதாவது, தேர்வாளர்களை கொண்ட தேர்தல் கல்லுரி முறை, நடைமுறையில் உள்ளது. வாக்காளர்களால் நேரடியாக தேர்வு செய்யப்படும் தேர்வாளர்கள் ஓட்டளித்து, அதிபரை தேர்வு செய்கின்றனர். இந்தாண்டு தேர்தல், நவ.,8ல் நடக்கிறது.
முன்னதாக, குடியரசுக் கட்சியின் தேசிய மாநாடு, ஓகியோவின் கிளீவ்லேண்ட் நகரில், ஜூலை 18-21ம் தேதிகளில் நடக்கிறது. ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாடு, பிலடெல்பியா நகரில், ஜூலை 25ல் நடக்கிறது. மாநாடுகளில், பிரதிநிதிகள் ஓட்டளித்து, கட்சிகளின் அதிகாரபூர்வ வேட்பாளர்களை தேர்வு செய்வர்.
வல்லரசு நாடான அமெரிக்காவின் சர்வதேச அளவிலான செயல்பாடுகள் எரிச்சலை ஏற்படுத்தினாலும், அந்நாட்டின் தேர்தல் முறை பலருக்கு உடன்பாடானாதாகவே இருக்கும். அதிலிருக்கும் வெளிப்படை முறை ஒரு முக்கியக் காரணம்.
தேர்தலில் போட்டியிட விரும்புவோர், நிதி திரட்டுவது, செலவிடுவது எல்லாம் வெளிப்படையாக இருக்க வேண்டும். போட்டியிடுபவர் மீதான தனிப்பட்ட புகார்கள், குற்றச்சாட்டுகள் எல்லாம் அலசி ஆராயப்படுவது வழக்கம்.
‘தங்களை ஆட்சி செய்பவர்கள் நேர்மையானவர்களாக இருக்க வேண்டும்’ என்று, அமெரிக்க மக்கள் விரும்புவதும் இதற்கு முக்கிய காரணம். ‘யாருக்கு ஆதரவு’ என்பதை, பெரும்பான்மை அமெரிக்கர்கள் வெளிப்படையாக அறிவித்து விடுவது, குறிப்பிடத்தக்க அம்சம்.
போலீஸ் வேலை பார்ப்பதும், போர்களை நடத்துவதுமாக இராமல், அமைதிக்கும், ஏழை நாடுகளின் வளத்துக்கும் வழி செய்யக்கூடிய ஒருவர், அதிபராக வந்தால், அமெரிக்கர்கள் மட்டுமல்ல; அனைவருக்கும் நன்மையே!

சனி, 16 ஜனவரி, 2016

வந்தது பார் ஆட்சி மாற்றம்!

உள்ளூரில் ஆட்சி மாற்றம் வருமா, வராதா என்று, எல்லோரும் ஏகத்துக்கும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், உலக அளவில் கவனிக்கப்பட வேண்டிய ஒரு ஆட்சி மாற்றம், ஏற்பட்டிருக்கிறது.
அது, தைவானில் நடந்த ஆட்சி மாற்றம். எட்டாண்டுகளாக ஆட்சியில் இருந்த தேசியவாத கோமிண்டாங் கட்சியினர், அதிகாரத்தை இழந்திருக்கின்றனர். அதிகாரப்பூர்வ முடிவுகள் அறிவிக்கப்படும் முன்னரே, அக்கட்சியின் வேட்பாளர் எரிக் சூ, தோல்வியை ஒப்புக் கொண்டு விட்டார்.
எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியினர், (டி.பி.பி.,) ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். முதல் முறையாக, பெண் ஒருவர், 59 வயது சை இங்-வென் அதிபராக பதவியேற்க உள்ளார்.
சீனாவில், கம்யூனிஸ்டுகளுடன் நடந்த உள்நாட்டுப் போர் முடிவில் தோல்வியுற்ற தேசியவாத கோமிண்டாங் கட்சியினர், 1949ல் பார்மோசா தீவில் (இப்போதைய பெயர்தான் தைவான்), தங்கள் ஆட்சியை நிறுவினர்.
நீண்ட காலம், அவர்களது ஆட்சியே சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டதாக இருந்தது.
ஐ.நா., சபையில், சீனாவுக்கான உறுப்பினர் அந்தஸ்தும், வீட்டோ அதிகாரமும் அவர்களிடமே இருந்தன. 1971ல், அந்த அதிகாரம் கம்யூனிஸ்ட்கள் தலைமையிலான சீனாவுக்கு மாற்றி அளிக்கப்பட்டது.
அப்போது முதல், சர்வதேச அரங்குகளில் ஒதுக்கி வைக்கப்பட்ட நாடாகவே தைவான் இருந்து வருகிறது. கம்யூனிஸ்ட் சீனாவின் எதிர்ப்பால், ஐ.நா., சபையில் உறுப்பினராக சேரக்கூட முடியவில்லை. ‘எந்த நாடும், தைவானுடன் தூதரக உறவு வைத்துக் கொள்ளக்கூடாது’ என்று மிரட்டல் விடுவது சீனாவுக்கு வாடிக்கை.
அதற்கு பயந்துகொண்டே, இந்தியா உட்பட பெரும்பாலான நாடுகள், தைவானுடன் நேரடி உறவு வைத்துக் கொள்வதில்லை. உலகின் 21 நாடுகளுடன் மட்டுமே தூதரக உறவு வைத்திருக்கும் தைவான், அமெரிக்க, ஜப்பான், தென் கொரிய ஆதரவுடன், தொழில் வளம் மிக்கதாக மாறியுள்ளது.
‘தைவான், தங்கள் நாட்டின் ஒரு பகுதி’ என்று கூறும் சீனா, ‘தேவைப்பட்டால், ராணுவ நடவடிக்கை மூலமாகக்கூட, தைவானை தங்கள் வசப்படுத்த நடவடிக்கை எடுப்போம்’ என்று அவ்வப்போது அச்சுறுத்தி வருகிறது.
இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்னைகள் தொடர்பாக, சமீப காலமாக பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. எனினும், ‘மீண்டும் சீனாவுடன் இணைவது என்ற பேச்சுக்கே இடமில்லை’ என்பதே, தைவானியர்களில் பெரும்பகுதியினர் கருத்தாக உள்ளது.
ஜனநாயக ஆட்சி முறையில் பழகிப்போன தைவான் மக்கள், சீனாவின் கெடுபிடி கம்யூனிஸ்ட் ஆட்சியின் கீழ் இருக்க விரும்பவில்லை. இரண்டு கோடியே 30 லட்சம் மக்கள் தொகை கொண்ட தைவானில், குறிப்பிட்ட கால இடைவெளியில் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. அப்படி நடத்தப்பட்ட தேர்தலில்தான், ஆளும் தேசியவாத கட்சியினர் தோற்று, எதிர்க்கட்சியினர் ஆட்சியைப் பிடித்திருக்கின்றனர்.
தோற்றுப் போன கோமிண்டாங் கட்சியின் தேசியவாதிகள், சீனாவுடன் அனுசரணையாக இருக்க வேண்டும் என்ற கொள்கை கொண்டவர்கள். வெற்றி பெற்ற ஜனநாயக கட்சியினரோ, ‘சீனாவுடன் அனுசரித்துப் போக வேண்டியதில்லை. தைவானை சுதந்திர நாடாக பிரகடனம் செய்ய வேண்டியதுதான் பாக்கி’ என்ற கொள்கையை கொண்டவர்கள்.
ஆகவே, எதிர்க்கட்சியினர் வெற்றி பெற்றிருப்பது, நிச்சயம் சீனாவுக்கு நல்ல செய்தியல்ல; புது அதிபரான சை, ‘சீனாவுடனான உறவில், தற்போதைய நிலை அப்படியே தொடரும்’ என்று அறிவித்திருப்பது ஒன்றுதான், சற்று ஆறுதலான செய்தி.

வெள்ளி, 15 ஜனவரி, 2016

இந்தியாவை குறி வைக்கும் ஈரான்!

எண்ணெய் வள நாடுகளுக்கு, ஏழரை சனி பிடித்திருக்கும் போலிருக்கிறது. அடி மேல் அடியாக, விழுந்து கொண்டே இருக்கிறது. ஜாண் ஏறினால், முழம் சறுக்கும் கச்சா எண்ணெய் மார்க்கெட், ஏறக்குறைய, நம்மூர் கத்தரி, தக்காளி மார்க்கெட் நிலவரத்துக்கு வந்து விட்டது.
போதாக்குறைக்கு, அணு ஆயுத தயாரிப்பு காரணமாக, சர்வதேச தடைகளுக்கு ஆளாக்கப்பட்டிருந்த ஈரான், ‘தடை எந்த நேரத்திலும் விலக்கப்படலாம்’ என்னும் நிலையில், எண்ணெய் ஏற்றுமதிச் சந்தையில் இறங்க, தீவிரம் காட்டி வருகிறது.
ஈரானிய எண்ணெய் கப்பல்களில், கச்சா எண்ணெய் ஏற்றும் பணி முழு வீச்சில் நடப்பதாகவும், இந்தியாவுக்கு ஒரு வாரத்துக்கு தேவையான கச்சா எண்ணெயுடன் கப்பல்கள் புறப்படும் நிலையில் இருப்பதாகவும், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் பீதியை கிளப்பிக் கொண்டிருக்கிறது.
விளைவு, 35 முதல் 38 டாலர் வரையில் இருந்த பீப்பாய் கச்சா எண்ணெய் விலை, நேற்று, 30 டாலர்களுக்கும் கீழே வந்து விட்டது; அமெரிக்க பங்குச்சந்தைகளும் அதல பாதாளத்தில் விழுந்திருக்கின்றன.
(இந்தியா கொள்முதல் செய்யும் தரம் குறைந்த கச்சா எண்ணெயின் விலை, சர்வதேச கச்சா எண்ணெய் விலையை காட்டிலும், சில டாலர்கள் குறைவாகத்தான் இருக்கும் என்பதை நினைவில் கொள்க!)
தடை விதிக்கப்பட்ட காலத்தில்கூட, இந்தியாவுக்குத்தான் அதிகப்படியான எண்ணெயை, ஈரான் ஏற்றுமதி செய்து கொண்டிருந்தது. தற்போது தடை விலகும் நிலையில், மீண்டும் இந்தியாவை குறி வைத்தே, ஏற்றுமதி சந்தையில் ஈரான் களம் இறங்கியுள்ளது.
அதாவது, தினமும் 2 லட்சத்து 60 ஆயிரம் பீப்பாய் எண்ணெயை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் ஈரான், கூடுதலாக, 2 லட்சம் பீப்பாய் ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டுள்ளது.
சீனாவுடன் ஒப்பிடுகையில், இந்தியப் பொருளாதாரம் நல்ல நிலையில் இருப்பதும், கச்சா எண்ணெயின் தேவை, சீனாவை காட்டிலும், இந்தியாவில் அதிகரித்துக் கொண்டே செல்வதும், ஈரானின் முடிவுக்கு காரணங்களாக உள்ளன.
‘இந்தியாவில் ஆண்டுக்கு 10 சதவீதம் கார் விற்பனை அதிகரிக்கிறது. இது, சீனாவை விட அதிகம்’ என்கின்றனர், பொருளாதாரப் புலிகள்.
அணு ஆயுதம் தயாரிப்பு பிரச்னை கிளம்பிய 2011க்கு முன், தினமும் 30 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை ஈரான் ஏற்றுமதி செய்து கொண்டிருந்தது.
சர்வதேச தடைகள் விதிக்கப்பட்ட நிலையில், எண்ணெய் ஏற்றுமதி முடங்கியது. அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே ஏற்றுமதி செய்ய முடியும் என்கிற நிலையில், தினமும், 10 லட்சம் பீப்பாய் மட்டுமே ஏற்றுமதியானது.
இப்போது, அணு ஆயுத தயாரிப்பை கைவிடுவதாக, அமெரிக்கா தலைமையிலான நாடுகளிடம், தலையில் அடித்து சத்தியம் செய்யாத குறையாக ஒப்பந்தம் செய்து கொடுத்ததை தொடர்ந்து, இன்றோ, நாளையோ, இன்னும் சில நாட்களிலோ, ஈரான் மீதான சர்வதேச தடைகள் விலக்கப்பட உள்ளன.
அதை எதிர்பார்த்து, ஈரானும், கப்பல்களில், கச்சா எண்ணெய் ஏற்றி, தயார் நிலையில் வைத்திருக்கிறது. விளைவு, சர்வதேச சந்தைகளில், எண்ணெய் விலை, தலைகீழாக பயணித்துக் கொண்டிருக்கிறது.
தடை விலக்கப்பட்டதும், உடனடியாக, ஐந்து லட்சம் பீப்பாய் எண்ணெய் ஏற்றுமதியை அதிகரிப்பது என்றும், போகப்போக இன்னொரு ஐந்து லட்சம் பீப்பாய் ஏற்றுமதி செய்வது என்றும் ஈரானிய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
விலைச்சரிவுக்காக கண்ணீர் வடிக்கும் பிற எண்ணெய் வள நாடுகளுக்கு, ஈரானியர்களின் வருகையானது, ‘ஏழரை’யின் தாக்குதலை உறுதிப்படுத்துவதாகவே இருக்கிறது. பரிகார பூஜைக்காக, திருநள்ளாறுக்கு தேடி வராமல் இருந்தால் சரி!

செவ்வாய், 12 ஜனவரி, 2016

அவர்கள்!

அமெரிக்காவின் துணை அதிபராக இருப்பவர், 73 வயது ஜோ பிடன். இவரது மகன், கடந்தாண்டு மூளைப்புற்றுநோய் பாதிப்பால் காலமானார். அவர், உடல் நலம் குன்றியிருந்தபோது நடந்த சம்பவம் ஒன்றை, பிடன் இப்போது பேட்டியில் கூறியிருக்கிறார்.
தன் மகன் உடல் நலமின்றி இருந்தபோது, அரசு வக்கீல் வேலையை விட தீர்மானித்திருந்ததாக தெரிவித்துள்ள பிடன், வருமானமற்ற நிலை ஏற்படும் பட்சத்தில், மகன் குடும்பத்துக்கு உதவி செய்வதற்காக, தானும், தன் மனைவியும், வீட்டை விற்க முடிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அதை அதிபர் ஒபாமாவிடம் தெரிவித்தபோது, ‘வீட்டை விற்க வேண்டாம்; தேவையான பணத்தை நான் தருகிறேன்’ என்று அவர் கூறியதாகவும் தெரிவித்துள்ளார். இதில், ஒபாமா, பணம் தருவதாக கூறியது, செய்தியே அல்ல.
உலகை கட்டியாளும் வல்லரசு நாட்டின் துணை அதிபர், மகன் குடும்பத்தைக் காப்பாற்ற பணமின்றி வீட்டை விற்க முன்வந்தார் என்பதுதான் செய்தி. நகராட்சி, மாநகராட்சி கவுன்சிலர்கள் எல்லாம், கோடி கோடியாக சம்பாதித்து, பலப்பல தலைமுறைகளை செட்டில் செய்வதை பார்க்கும் நாம், வல்லரசின் துணை அதிபர், மகன் குடும்பச்செலவுக்காக வீட்டை விற்க முன் வந்த தகவலையும் பார்க்கிறோம். நாம் எங்கே, அவர்கள் எங்கே!

ஆடு பகை; குட்டி உறவு!

மத்தியக்கிழக்கில், தாதா நாடாக உருவெடுத்திருக்கும் துருக்கிக்கு, நண்பர்களைப் போலவே, எதிரிகளும் அதிகம். நீண்ட கால நட்பு நாடு அமெரிக்கா; சமீபத்திய எதிரி, ரஷ்யா.
முதலாம் உலகப்போரில் அடைந்த படுதோல்விக்குப் பிறகு, பலப்பல நாடுகளாக பிளக்கப்பட்ட ஒத்தமான் பேரரசின் மிச்சம் மீதியாக இப்போது இருப்பது, துருக்கி.
அமெரிக்கா தலைமையிலான ‘நேட்டோ’ ராணுவக்கூட்டமைப்பில் உறுப்பினர் என்ற அந்தஸ்தால், அக்கம் பக்கத்து நாடுகளை மிரட்டிக் கொண்டிருக்கும் இந்நாட்டின் அதிபர், இஸ்லாமிய பழமைவாதக் கட்சியின் தைப் எர்தோவன்.
அவரது செயல்பாடுகள், யாராலும் கணிக்க முடியாதவை. ஈராக், சிரியாவில் கணிசமான நிலப்பரப்பில் ஆட்சி நடத்தும் இஸ்லாமிக் ஸ்டேட் பயங்கரவாதிகள், ஆள் பலமும், ஆயுத பலமும் பெற்றதில், இவரது பங்களிப்பு மிக அதிகம்.
ஒரே நேரத்தில், ரஷ்யா, சிரியா, ஈரான், ஈராக், கிரீஸ் என பல முனைகளில் மோதலை நிகழ்த்திக் கொண்டிருக்கும் எர்தோவன், உள்நாட்டில் குர்துக்களுடன் மீண்டும் முழு அளவில் சண்டையை துவக்கியிருக்கிறார்.
இதற்கான பின்னணி, முதல் உலகப் போரில் இருந்து துவங்குகிறது. துருக்கி, ஈரான், ஈராக், சிரியா என நான்கு நாடுகளும் சந்திக்கும் எல்லைப்பகுதியே, குர்து இன மக்களின் தாயகம்.
துருக்கியில் ஒன்றரை கோடி முதல் ஒன்றே முக்கால் கோடிப்பேர் (மொத்த மக்கள் தொகையில் 20 சதவீதம்), ஈரானில் 60 லட்சம் பேர் (10 சதவீதம்), ஈராக்கில் 60 லட்சம் பேர் (17 சதவீதம்), சிரியாவில் (10 சதவீதம்) 20 லட்சம் பேர், என்ற எண்ணிக்கையில் குர்துக்கள் இருக்கின்றனர். இவர்களில் பெரும்பான்மையினர் சன்னி இஸ்லாமியர். ஷியா பிரிவினரும் இருக்கின்றனர். யாசிடி, கிறிஸ்தவர், யூதர்களும் இவர்களில் உண்டு.
குர்துக்கள் பேரும் மொழி, இந்தோ-ஈரானிய மொழிக்குடும்பத்தின் ஒரு அங்கம். எண்ணிக்கையில் கணிசமானவர்களாகவும், தொடர்ச்சியான ஒரே நிலப்பரப்பை வசிப்பிடமாகவும் கொண்டிருக்கும் தங்களுக்கு தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கையை, குர்துக்கள், கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் வலியுறுத்திப் பேச ஆரம்பித்தனர். முதல் உலகப் போர் முடிவில், அதற்கான வாய்ப்பும் ஏற்பட்டது.
ஆனால், துருக்கி, ஈரான், ஈராக், சிரியா நாடுகள் மேற்கொண்ட கடுமையான ஒடுக்குமுறைகளால், குர்துக்களின் தனி நாடு கோரிக்கை, அப்படியே முடக்கப்பட்டது.
துருக்கியிலும், ஈராக்கிலும் போராட்டம் ஓய்ந்தபாடில்லை.
வெவ்வேறு வடிவங்களில் தொடர்ந்த கோரிக்கை, துருக்கியில்  1978ல் அப்துல்லா ஓகலன், பி.கே.கே., எனப்படும் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியை தொடங்கியதும், ஆயுதமேந்திய போராட்டமாக மாறியது. ஆனாலும் பலனில்லை.
துருக்கிய குர்துக்களின் போராட்டம், பின்னுக்குத் தள்ளப்பட்டதற்கு, மேற்கத்திய நாடுகளின் ஆதரவின்மையே முக்கிய காரணம்; ஆனால், சதாம் உசேன் எதிர்ப்பு என்ற பலமான காரணியால், எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், ஈராக்கிய குர்துக்கள், தனி நாடு கோரிக்கையை வென்றெடுக்கும் நிலைக்கு வந்து விட்டனர்.
இர்பில் நகரை தலைமையிடமாக கொண்டு, குர்திஸ்தான் தன்னாட்சிப் பிரதேசம், ஏறக்குறைய தனி நாடாகவே செயல்பட்டு வருகிறது. உள்நாட்டுப் போர் நடக்கும் அண்டை நாடான சிரியாவிலும், அதே நிலை உருவாக தொடங்கியிருக்கிறது.
இப்படிப்பட்ட சூழலில், தங்கள் நாட்டில் கணிசமான எண்ணிக்கையில் இருக்கும் குர்துக்களின் மீது, துருக்கிக்கு சந்தேகம் கிளம்பியிருக்கிறது. ஆகவேதான், உள்நாட்டில் குர்துக்கள் மீது கடுமையான தாக்குதலை தொடங்கிய துருக்கி, சிரியாவில் இஸ்லாமிக் ஸ்டேட் பயங்கரவாதிகளை எதிர்த்து போராடும் குர்துப்படையினர் மீதும் தாக்குதல் நடத்துகிறது.
சிரியாவின் குர்துப் படையினருக்கும், தங்கள் நாட்டில் பெரும் பலத்துடன் இருக்கும் பி.கே.கே., குர்துப்படையினருக்கும் இருக்கும் நெருக்கமான உறவு,. துருக்கிய அரசுக்கு பீதியை கிளப்புகிறது. ஒரு வேளை, சிரியாவிலும், குர்துக்கள் தன்னாட்சியோ, தனி நாடோ பெற்று விட்டால், தங்கள் நாட்டில் தலைவலி அதிகரித்து விடும் என்பது, துருக்கி ஆட்சியாளர்களின் எண்ணம்.
உள்நாட்டில் குர்துக்களிடம் கடுமையான அணுகுமுறையை பின்பற்றுவதுடன், சிரியாவில் புகுந்தும் குர்துப்படைகளை தாக்கும் துருக்கி, ஈராக்கில் தன்னாட்சி நடத்தும் குர்துப் படையினருடன் கொஞ்சிக் குலாவுகிறது; அவர்களுக்கு பயிற்சியும் அளிக்கிறது; வர்த்தக உறவும் வைத்துக் கொள்கிறது.
ஈராக்கிய குர்துப் பிரதேசத்தில் இருந்து, நேரடியாக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் அதே வேளையில், ஈராக் மத்திய அரசாங்கத்துடன், மோதல் போக்கை கொண்டிருக்கிறது. அதாவது, எல்லா இடத்திலும், ‘ஆடு பகை; குட்டி உறவு’ என்பதே, துருக்கியின் நிலையாக இருக்கிறது.
இப்போது, அமைதி உடன்பாடும், போர் நிறுத்தமும் குப்பைக்குப் போன நிலையில், துருக்கிய அரசும், பி.கே.கே., குர்துப்படையினரும், முழு அளவில் மீண்டும் மோதலில் ஈடுபட வாய்ப்புகள் அதிகரித்து விட்டன.
தன் நாட்டு விமானத்தை சுட்டு வீழ்த்திய ஆத்திரத்தில் இருக்கும் ரஷ்யா, குர்துப்படையினருக்கு ஆதரவு தர வாய்ப்பும் உண்டு. அதிகரித்து வரும் பயங்கரவாத தாக்குதல்கள், உள்நாட்டில் அமைதியற்ற சூழல் உருவாகி வருவதற்கு கட்டியம் கூறுகின்றன. ‘பிரச்னையை எர்தோவன் எப்படி சமாளிக்கப் போகிறார்’ என்று, துருக்கியின் நட்பு நாடுகளும், எதிரி நாடுகளும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
....

வெள்ளி, 8 ஜனவரி, 2016

சீனாவுக்கு என்ன ஆச்சு!

இந்தியா, எப்போது ரூபாய் மதிப்பைக் குறைத்தது என்பது, நினைவில் இருக்கிறதா? நரசிம்ம ராவ் பிரதமராகவும், மன்மோகன் சிங் நிதியமைச்சராகவும் பொறுப்பேற்ற 1991ம் ஆண்டில், அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாணய மதிப்புக்குறைப்பு நடைபெற்றது. அதாவது, இந்தியா, பொருளாதார ரீதியாக திவால் ஆகி விடும் என்கிற நிலையில், ரூபாய் மதிப்பு, 18 சதவீதம் குறைக்கப்பட்டது.
கையிருப்பில் அந்நியச் செலாவணியே இல்லை; ரிசர்வ் வங்கி வைத்திருக்கும் தங்கத்தை அடகு வைத்துப் பணம் வாங்கி, கச்சா எண்ணெய் வாங்கும் நிலையில், நாடு நாடாக கையேந்தும் கட்டாயத்தில் இருந்த காலத்தில், இந்தியா, ரூபாய் மதிப்பை குறைத்தது.
ஆனால், அப்படி எந்த கட்டாயமும் இல்லாத சீனா, இப்போது, நாணய மதிப்பை தாறுமாறாக குறைத்து, ஆடு புலி ஆட்டம் ஆடிக் கொண்டிருக்கிறது. வியாழக்கிழமையன்று, சீனத்து யுவான் மதிப்பை குறையவிட்டதன் எதிரொலியாக, உலக நாடுகளின் பங்குச்சந்தைகள் தலைகுப்புற விழுந்திருக்கின்றன. முதலீடு செய்தவர்கள் எல்லாம், தலையில் துண்டு போடாத குறையாக, புலம்பித்தீர்க்கின்றனர்.
இப்படி சீனா செய்தது, முதல் முறையல்ல; தொடர்ச்சியாக, எட்டாம் முறையாக, நாணய மதிப்பை குறைத்திருக்கிறது. உலகப்பொருளாதாரத்தை கரைத்துக் குடித்திருக்கும் நிபுணர்கள் எல்லோரும், சீனாவின் நோக்கம் தெரியாமல், மண்டையை பிய்த்துக் கொள்கின்றனர்.
ஏற்றுமதி பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்ட சீனாவிடம், அந்நியச் செலாவணி, கொட்டிக் கிடக்கிறது. இந்த வார கணக்கீட்டின்படி, அந்நாட்டு மத்திய வங்கி வைத்திருக்கும் அந்நியச் செலாவணி, 3.33 டிரில்லியன் டாலர்கள்.
ஒரு மில்லியன் என்பது பத்து லட்சம். ஒரு பில்லியன் என்பது 100 கோடி. ஒரு டிரில்லியன் என்பது, ஆயிரம் பில்லியனுக்கு சமம். அதாவது, ஒரு லட்சம் கோடி டாலர். இந்த இடத்தில், இந்தியாவின் அந்நியச்செலாவணி கையிருப்பு, 351 பில்லியன் டாலர் மட்டுமே என்பதை கருத்தில் கொள்ளுங்கள்!
தொழில் துறையில் தேக்க நிலை இருந்தாலும், அந்நாட்டுக்கு பணப் பிரச்னை என்பதெல்லாம் கிடையவே கிடையாது. பிற ஆசிய நாடுகள், ஆப்பிரிக்க, தென் அமெரிக்க நாடுகளை, பணத்தால் அடித்தே, தன் வசப்படுத்தி வருகிறது, சீனா. அப்படியெனில், என்னதான் பிரச்னை?
இப்போது யுவான், சர்வதேச நாணயம் ஆகி விட்டது. ஐ.எம்.எப்., தன் கையிருப்பு செலாவணியில் ஒரு பகுதியை யுவான் ஆக வைத்திருக்கப்போவதாகவும் அறிவித்து விட்டது.
திவால் ஆகிப்போன ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்பே, இனி மேல் சீனத்து யுவான் தான் எங்களுக்கும் நாணயம் என்று அறிவித்திருக்கிறது. இப்படி மேலே மேலே பறந்து கொண்டே இருக்கும் சீனா, ஏன் இப்படி திடீரென நாணய மதிப்பை குறைத்து, மற்றவர் கழுத்தை அறுக்க வேண்டும் என்பது, உலக நாட்டினரின் கேள்வியாக இருக்கிறது.
அந்நாட்டு அரசோ, அமைச்சர்களோ, அதிகாரிகளோ, வெளிப்படையாக எதையும் அறிவிப்பதில்லை. எல்லாம், வெளியில் இருந்து வரும் யூகங்கள் தான். ‘நாணய மதிப்பை சரிய அனுமதிப்பதன் மூலம், உற்பத்தி செலவினம் குறைந்து விடும்; ஏற்றுமதிச் சந்தையில் பிற நாடுகளுடன் போட்டியிட்டு எளிதில் வெல்ல முடியும்; ஸ்தம்பித்து நிற்கும் பொருளாதாரம், தொழில் துறைக்கு மீண்டும் புத்துயிர் தர முடியும்’ என்பது அதன் திட்டம் என்பது, யூகங்களில் பிரதானமான ஒன்று.
சந்தையின் போக்கில், நாணய மதிப்பை சரியவிடுவதுபோல் போக்கு காட்டி, ‘தான் பரம யோக்கியர்’ என்று காட்டிக் கொள்ளும் முயற்சி என்றொரு யூகமும் இருக்கிறது.
சீனா போன்ற பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நாடு,  நாணய மதிப்பை குறைப்பதன் மூலம், உலகச்சந்தைகளில் கடும் பாதிப்பு ஏற்படுகிறது. மற்ற நாடுகளும், உலகச்சந்தைகளில் போட்டியிட்டாக வேண்டிய சூழ்நிலை இருப்பதால், தங்கள் நாணயத்தை குறைக்கும் கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றன.
இதனால், டாலர் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படும் பொருட்களின் விலை, தாறுமாறாக எகிறும். உதாரணத்துக்கு கச்சா எண்ணெய், எரிவாயு, தங்கம் போன்றவை. இவ்வாறு ஒவ்வொரு நாடும் தங்கள் நாணய மதிப்பை குறைக்க முற்பட்டால், சந்தை நிலைத்தன்மையற்றதாகி விடும். பொருட்களின் விலை எகிறுவதால், பொருளாதாரம் ஸ்தம்பித்து விடும் என்கின்றனர், மேற்கத்திய பொருளாதாரப்புலிகள்.
மலையளவு அந்நியச் செலாவணியை கையில் வைத்திருக்கும் சீனா, பிறரைப் பற்றி கவலைப்படப் போவதில்லை. ‘சந்தையில், தான் மட்டுமே இருக்க வேண்டும், மற்றவர்கள் ஒழிந்தாலும் தனக்கு கவலையில்லை’ என்பதைப்போல், சீனாவின் செயல்பாடு இருப்பதாக, மேற்கத்திய ஊடகங்களில் கருத்துக்கள் வெளியாகின்றன.
சீனாவின் பரிசோதனை முயற்சிகளால், பிற நாடுகளில் பங்குச்சந்தையில் இருக்கும் முதலீட்டாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர் என்பது மட்டும் நிச்சயம். 

புதன், 6 ஜனவரி, 2016

இழப்பதற்கு எதுவுமில்லை!

வடகொரியா, இந்த முறை வெடித்திருப்பது ஹைட்ரஜன் குண்டு. ‘சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது’ என்று அறிவித்த அந்நாட்டு அரசு தொலைக்காட்சி, மக்கள் ஆடிப்பாடி கொண்டாடுவதுபோன்ற வீடியோ காட்சிகளையும் ஒளிபரப்பியிருக்கிறது.
சிரியா, ஈரான், ஈராக், சவுதி, ஏமன், பாலஸ்தீனம், உக்ரைன் விவகாரங்களில் மண்டை காய்ந்து கொண்டிருக்கும் மேற்கத்தியர்களுக்கு, கடுப்பைக் கிளப்புவதாக அமைந்திருக்கிறது, இந்த சோதனை.
வழக்கம்போல, கண்டனக் கணைகள் கிளம்பியிருக்கின்றன; ‘கடும் நடவடிக்கை எடுப்போம்’ என மிரட்டலும் விடப்பட்டிருக்கிறது. மேற்கத்திய ஊடகங்கள், சோதனை பற்றிய வழக்கமான சந்தேகத்தை கிளப்பிக் கொண்டிருக்கின்றன.
வடகொரியாவுக்கு சர்வதேச அரங்கில் இருக்கும் ஒரே ஆதரவான சீனா கூட, இந்த சோதனையை கண்டித்திருக்கிறது. அதைப்பற்றி எல்லாம், அந்நாடு கவலைப்பட்டதாக தெரியவில்லை; கவலைப்படவும் போவதில்லை.
தாத்தா, அப்பா, பேரன் என அடுத்தடுத்து, ஒரே குடும்பத்தின் ஆட்சியில் இருக்கும் வட கொரியாவில், பெயருக்குத்தான் கம்யூனிஸ்ட் ஆட்சி; நடப்பதெல்லாம், தனி நபர் ஒருவரின் சர்வாதிகாரம் மட்டுமே.
இப்போது அதிபராக இருக்கும், 32 வயது மட்டுமே நிரம்பிய கிம் ஜங் உன், எப்படிப்பட்டவர், நல்லவரா, கெட்டவரா என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது.
இம்மென்றாலும் மரண தண்டனை, ஏன் என்றாலும் மரண தண்டனை என்று, 70 ஆண்டுகளாக பழகிப் போய் விட்டனர், மக்கள். சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, வட கொரியாவுக்கு, பணமும், பொருளும் கொடுத்து ஆதரிப்பார் யாருமில்லை; ‘அரசு சீரழிந்து, அகதிகளாக மக்கள், தங்கள் நாட்டுக்கு வந்து விடக்கூடாதே’ என்பதற்காக, சீனா மட்டும் அவ்வப்போது ஆதரவு வேஷம் கட்டுகிறது.
வறுமையில் வாடும் வட கொரியா, ‘அணு குண்டு ஒன்றுதான் நமக்குப் பாதுகாப்பு’ என்பதை உணர்ந்து ஆண்டுகள் பல கடந்து விட்டன. ஆகவேதான், ஈராக்கின் சதாம் உசேன் மீதும், லிபியாவின் கடாபி மீதும் கை வைத்த மேற்கத்தியர்கள், வட கொரியா மீது கை வைக்க அஞ்சுகின்றனர்.
அந்நாட்டுக்கு மிக அருகே இருக்கும் ஜப்பானிலும், தென் கொரியாவிலும் அமெரிக்க படைத்தளங்கள் இருக்கின்றன; அவற்றில் பல்லாயிரக்கணக்கான அமெரிக்க வீரர்கள் இருக்கின்றனர். ஆகவே, பைத்தியக்காரன் கையில் அணு குண்டு இருப்பதன் அசவுகர்யத்தை, உணர்ந்திருப்பதால்தான், வெற்று மிரட்டல்களோடு வேடிக்கை பார்க்கிறது, அமெரிக்கா. வடகொரியாவை பொறுத்தவரை, இழப்பதற்கு எதுவுமில்லை. ஆபத்து என்று வந்து விட்டால், இருக்கவே இருக்கிறது அணு குண்டு.
அந்நாடு வைத்திருக்கும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளின் தாக்குதல் எல்லை, அமெரிக்கா வரை நீண்டு விட்டதாக, தகவல்கள் பீதி கிளப்புகின்றன. ஏற்கனவே கடுமையான பொருளாதார தடைகளுக்கு ஆட்பட்டிருக்கும் வட கொரியாவை எப்படி வழிக்கு கொண்டு வருவது என்று தெரியாமல், அமெரிக்காவும், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் நாடுகளும் முட்டி மோதிக் கொண்டிருக்கின்றன.
ஐ.நா., பொதுச் செயலாளரான, தென் கொரியர் பான் கீ மூனுக்கு, பாவம் தர்ம சங்கடம். 70 ஆண்டுகளை கடந்தும் நீடிக்கும் கொரியர்களின் மோதல், மனித குலத்தின் ராஜதந்திர செயல்பாடுகளுக்கு ஏற்பட்ட பெரும் தோல்வி என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

ஞாயிறு, 3 ஜனவரி, 2016

சீரழிந்த நம்பிக்கை!

அமெரிக்காவின் முதல் கருப்பின அதிபர் என்ற பெருமையுடன் பதவிக்கு வந்தவர் ஒபாமா. ஓட்டளித்தவர்களுக்கு மட்டுமல்ல; உலக மக்களில் கணிசமான பகுதியினருக்கு, அவர் மீது நல்லெண்ணமும், ஏதோ ஒரு இனம்புரியாத நம்பிக்கையும் இருந்தன.
ஆனால், அவர்கள் எல்லோரையும் ஒபாமா கைவிட்டு விட்டார் என்பதே, இப்போது உலகளாவிய கருத்தாக இருக்கிறது. சர்வதேச அரசியலிலும், உள்நாட்டு அரசியலிலும், ஒபாமாவின் பல நிலைப்பாடுகள் கேலிக்குரியதாக மாறியிருக்கின்றன.
‘தங்களுக்கெல்லாம் ஏதாவது நல்லது நடக்கும்’ என்று எதிர்பார்த்த அமெரிக்க கருப்பினத்தவர், ‘ஒபாமாவின் ஏழாண்டு ஆட்சியில், தாங்கள் அடைந்தது எதுவுமில்லை’ என்றே கருதுகின்றனர். கருப்பின இளைஞர்களும், பெண்களும் வெள்ளையின போலீசாரால் அடுத்தடுத்து வேட்டையாடப்பட்ட சம்பவங்கள், அமெரிக்காவில் அவ்வப்போது அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன. பெர்குஸன் நகரில் அப்படிப்பட்ட சம்பவம் நடந்தபோது, ஒபாமா விடுமுறையில் கோல்ப் விளையாடிக் கொண்டிருந்தார்.
பொருளாதாரத்திலும், ராணுவ ரீதியாகவும், பலம் வாய்ந்த தங்கள் நாடு, ஒபாமாவின் செயல் திறனற்ற ஆட்சியால், தேவையற்ற விமர்சனங்களுக்கு ஆளாகி வருவதாக, அமெரிக்கர்களின் மதிப்பீடு இருக்கிறது.
அவரது பதவிக்காலத்தில் எடுக்கப்பட்ட சர்வதேச அரசியல் முடிவுகளில், கம்யூனிச நாடான கியூபாவுடன் மீண்டும் உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதும், ஈரானுடன் பேச்சு நடத்தி, பொருளாதார தடைகளை விலக்கிக் கொள்வதும் முக்கியமானவை.
அறுபது ஆண்டுக்கும் மேலாக, பொருளாதார தடைகளுக்கு ஆளாக்கப்பட்டிருந்த கியூபாவுடன் மீண்டும் உறவு ஏற்படுத்திக் கொள்ளும் முடிவுக்கு, பெரிய அளவில் எதிர்ப்பில்லை. ஆனால், ஈரான் விவகாரம் அப்படியல்ல; முக்கிய எதிர்க்கட்சியான, குடியரசு கட்சியினரின் கடும் எதிர்ப்பையும், தோழமை நாடான இஸ்ரேலின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், ஈரானுடன் பேச்சைத் தொடங்கினார் ஒபாமா.
‘பொருளாதாரத் தடையை விலக்கிக் கொள்ள வேண்டுமெனில், அணு ஆயுதம் தயார் செய்யக்கூடாது’ என்பதே, அமெரிக்க தரப்பு வாதம். இதை ஏற்றுக் கொண்ட ஈரான், ‘அணு ஆயுதம் தயாரிக்க மாட்டோம்’ என்று உறுதி கூறி, பொருளாதார தடையில் இருந்து தப்பித்து வெளியே வர முயற்சிக்கிறது.
பேச்சுவார்த்தைக்கு, உள்ளூரிலும், உலக அளவிலும், கடும் எதிர்ப்பு இருக்கவே செய்தது.
இருந்தாலும், தன் நிலையில் ஒபாமா உறுதியாக இருந்தார். எறும்பு ஊர கல்லும் தேய்ந்தாற்போல, இப்போது அவரது முடிவு மாறும் போலிருக்கிறது. ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகள் விதிக்க முடிவெடுக்கப்பட்டால், அது ஒரு வகையில், ஒபாமாவின் ‘அந்தர் பல்டி’ என்றே சொல்ல வேண்டும்.
மற்றபடி, லிபியா மீது தாக்குதல் நடத்தி, அந்நாட்டை சீர்குலைத்தது, ஈராக்கின் ஒரு பகுதியை பயங்கரவாதிகள் கைப்பற்றியும், கண்டுகொள்ளாமல் இருந்தது, ஆப்கானிஸ்தானில் இருந்து ராணுவத்தை அவசரம் அவசரமாக திரும்பப்பெற்று இப்போது விழி பிதுங்கியிருப்பது, சிரியா பிரச்னையில் மூக்கை நுழைத்து குழப்பம் விளைவிப்பது, உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிராக தடைகளை விதித்து, ஐரோப்பிய நாடுகளையும் விடாப்பிடியாக நிர்ப்பந்தம் செய்வது என அடுத்தடுத்து பல குளறுபடிகளுக்கு அமெரிக்கா காரணமாக இருந்தது, ஒபாமாவின் பதவிக்காலத்தில்தான்.
தனி நாடாக உருவான காலம் முதல், எந்த ஒரு அமெரிக்க அரசுடனும், இஸ்ரேல் அரசு இந்த அளவு உரசிக் கொண்டதாக சரித்திரம் இல்லை. அந்தளவுக்கு, ஒபாமா அரசு மீது, இஸ்ரேலியர்களுக்கு வெறுப்பு உண்டாகி விட்டது.
ஒரு ராணுவ அமைச்சர், திடுதிப்பென்று பதவியில் இருந்து விரட்டியடிக்கப்படுவதெல்லாம், சர்வாதிகார நாடுகளில் மட்டுமே சாத்தியம். அதையும் நிகழ்த்திக் காட்டி விட்டார் ஒபாமா. அகதிகள் பிரச்னையால், ஐரோப்பிய நாடுகள் திணறித் தத்தளிப்பதை கண்கூடாகப் பார்த்தும், கையைப் பிசைந்து கொண்டு நின்றவராகவே இருந்தார். அவரால், எந்த முடிவும் எடுக்க முடியவில்லை.
ஒசாமா பின் லேடனை வேட்டையாடியது அவரது பதவிக்காலத்தில் நடந்திருக்கிறது. அதுகூட, நீண்ட காலத்திட்டம். ஒபாமாவின் பங்கெல்லாம், அதிரடியாக பாகிஸ்தானில் நுழைந்து தாக்குதல் நடத்த அனுமதியளித்தது மட்டும்தான்.
கியூபா எல்லையில் குவாண்டனாமோ விரிகுடாவில், பயங்கரவாதிகளை அடைத்து வைப்பதற்கான சிறைச்சாலை இருக்கிறது. ‘ஆட்சிக்கு வந்தால், அந்த சிறைச்சாலையை மூடுவேன்’ என்பது ஒபாமாவின் வாக்குறுதி. இன்றுவரை அது நிறைவேற்றப்படவில்லை. ‘அதெல்லாம் முடியாது’ என்று, பாதுகாப்புத்துறை கூறி விட்டதாக, தகவல்கள் கசிகின்றன.
‘ஈராக், ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்கப்படைகளை திரும்பப்பெறுவேன்’ என்பது ஒரு வாக்குறுதி. திரும்பப்பெறவும் முயற்சித்தார். ‘பயனில்லை’ என்று தெரிந்தநிலையில், இப்போது ஈராக்கிலும், ஆப்கனிலும், மீண்டும் அமெரிக்கப்படைகள் பாதுகாப்புக்கு வரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. அந்த வகையில், ஒபாமாவின் வாக்குறுதி, முன்யோசனையற்ற, வெற்று வாக்குறுதி என்றே நிரூபணம் ஆகியுள்ளது.
‘ஒபாமாகேர்’ என்று தம்பட்டம் அடிக்கப்பட்ட சுகாதாரக் காப்பீடு திட்டம் மட்டுமே, அவரது பெயரை சொல்லிக் கொண்டிருக்கும் என்கின்றனர், அமெரிக்கர்கள்.
பதவிக்காலம் முடிவதற்கு இன்னும் ஓராண்டு காலம் முழுமையாக இருக்கும் நிலையில், சாதித்து விட்டதாக சொல்லிக் கொள்வதற்கு பெரிதாக எதுவுமின்றி, படிக்காமல் தேர்வை எதிர்கொள்ளும் மாணவனை ஒத்த மனநிலையுடன் வெள்ளை மாளிகையில் உட்கார்ந்திருக்கிறார், ஒபாமா. ‘நம்மால் முடியும்’ என்ற அவரது கோஷத்தின் ஜாலத்தில் ஏமாந்த அமெரிக்கர்கள், சீரழிந்த நம்பிக்கையாகவே அவரைப் பார்க்கின்றனர்.